அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை தலைமையக பொலிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டுதலிலும், ‘மகா பந்துவ’ அமைப்பின் ஒத்துழைப்புடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்ல, அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், நகர்ப்புற மக்களுடன் கிராமப்புற மக்களும் இவ்வாறான மோசடிகளில் சிக்கி வருவதாகவும், கவலைக்கிடமான விடயமாக அரசாங்க ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் கூட பெருந்தொகை பணத்தை இழந்து ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இலங்கை மத்திய வங்கியின் நிதி ஒழுங்குமுறை மற்றும் அமுலாக்கல் பிரிவின் அதிகாரிகள், சட்டவிரோத பிரமிட் திட்டங்கள், இணையவழி நிதி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டு வலைகளிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.
நிகழ்வில் மத்திய வங்கியின் பிரதிப் பணிப்பாளர் அருணா விஜயசிறி, உதவிப் பணிப்பாளர் கிஹந்த சில்வா, திருகோணமலை பிராந்திய முகாமையாளர் கே. பிரபாகரன், பிராந்திய முகாமையாளர் டி. சஞ்சீவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அத்துடன், அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தண்டநாராயணா, அம்பாறை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திக்க குணவர்தன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளும், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.








