யாழ்ப்பாணம், செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட தூதுக்குழுவினர் இன்று (22) அங்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதனையொட்டி, மயானத்துக்கு வெளியே அமைந்துள்ள ஏ-9 வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உள்ளக விசாரணை நடைமுறைகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும், சித்தப்பாத்தி மனிதப் புதைகுழி அகழாய்வில் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மற்றும் புதிய ஆதாரங்கள் கண்டறியப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர்கள், உண்மையை வெளிக்கொணர சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை அவசியம் என கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, போராட்டக்காரர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதனிடையே, மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதிகள் இருவரை சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தூதுக்குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் கருத்து கேட்க முயன்றபோதும், அவர்கள் எந்தவித கருத்தையும் வெளியிடாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.










