2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கில் சந்தேகநபர் ஒருவருக்கு தலைமறைவாக இருக்க உதவியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் கடற்படைத் தளபதி இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அங்கு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பில் தாம் குற்றமற்றவர் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, அவரை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் வசந்த அமரசேன உத்தரவிட்டார்.
மேலும், குறித்த வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








