தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாகச் செயல்படும் தற்போதைய சூழ்நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தொடர்ந்துள்ள வழக்கு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எல்.எம். றிபாஸ் (அலறி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணியின் நோக்கம் இரு சமூகங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதாக கூறப்படும் நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்திலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், கல்முனை உப பிரதேச செயலக வழக்கு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதாடி வருவதாகவும், இந்த நிலையில் அவர் வழக்கிலிருந்து விலகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை காண முடியுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஏ.எல்.எம். றிபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இணக்கமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் மாநகர சபைத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் நோக்கங்களை விடுத்து மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








