ஹிக்கடுவை கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மேலும் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது, மூவரும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடியுள்ளனர்.

இதனை அவதானித்த ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர், நீரில் மூழ்கிய மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் சடலம் பலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.