தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் வடக்கு மாகாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் சொகுசுப் பேருந்துகளில் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் காணப்பட்டால், பொதுமக்கள் முறைப்பாடு செய்ய முடியும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இயங்கும் பேருந்துகளை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மன்னார் – கற்பிட்டி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட பேருந்தொன்றில் செல்லுபடியான வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாமை மற்றும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படாதமை கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த பேருந்துக்கு ரூ.20,000 நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில சொகுசுப் பேருந்துகளில்:
ஆசனங்கள் சரியாக இயங்காமை
மூட்டைப்பூச்சி தொல்லை
குளிரூட்டி (A/C) செயலிழப்பு
பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள்
போன்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பயணிகள், புகைப்படம் அல்லது வீடியோ போன்ற ஆதாரங்களுடன் 071 9090900 என்ற WhatsApp இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பையும் தரமான போக்குவரத்து சேவையையும் உறுதி செய்ய வடக்கு மாகாணம் முழுவதும் சோதனைகள் தொடரும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.








