இந்த நாட்டில் சிங்கள தலைவர்கள் என்பது வலதுசாரியாகயிருந்தாலும் இடதுசாரியாகயிருந்தாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் குற்றமிழைத்த படையினரை பாதுகாக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்துவருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழு ஊடகப்பேச்சாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக பயணிக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் விடுத்துள்ள அழைப்பினை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டம் நடைபெற்றளது.இதனை தேசிய மக்கள் சக்தி அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்ற கேள்வி எங்களிடமிருந்தது. இந்த பேரவையின் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்ட கருத்துகள் தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஏமாற்றமானதாகவேயிருந்தது.
இறுதி யுத்ததின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் அவலங்கள் தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கான பொறுப்புக்கூறலை பார்க்கின்றபோது அமைச்சரின் கருத்து ஏமாற்றத்தினையளித்தது.
கடந்த காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியானாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியென்றாலும் இந்த கட்சிகள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக செயற்பட்டதைவிட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளையே முன்னெடுத்திருந்தது.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் அடிப்படையில் பார்க்கின்றபோது இறுதியுத்ததில் நடைபெற்ற விடயங்களின் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்.
உண்மைகள் கண்டறியப்பட்டால் அதற்கான நீதிகள், பரிகாரங்கள் வழங்கப்படவேண்டும். அவை வழங்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் பொறுப்புக்கூறலில் அரசாங்கம் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

ஆனால் வெளியுறவு அமைச்சர் தெரிவித்த கருத்துகளை பார்க்கின்றபோது அவர் உள்நாட்டு பொறிமுறையின் அடிப்படையில் இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்ற அடிப்படையிலும், காணாமல்ஆக்கப்பட்டோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் ஊடாக உள்ளக பொறிமுறையினை பயன்படுத்தி இறுதி யுத்த விடயங்களை கையாளலாம் என்றுன்ம் சொல்லியுள்ளார்கள்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில் யுத்தம் நிறைவுபெற்று 16ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உள்ளக பொறிமுறை எங்களுக்கு ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை. விஜயதாச ராஜபக்ஸ அமைச்சராகயிருந்த காலப்பகுதியில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாவினை வழங்கி கோவையினை மூடிவிடலாம் என்று கருதினார்கள் அதுவெற்றியளிக்கவில்லை.
சிங்கள தலைவர்களைப்பொறுத்த வரையில் வலதுசாரி கட்சிகள் என்றாலும் இடதுசாரி கட்சிகள் என்றாலும் அவர்கள் செய்கின்ற செயற்பாடுகள் என்பது தமிழ் மக்களுக்கு பாரிய ஏமாற்றத்தினை தருகின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதை விட பாதிப்பினை ஏற்படுத்திய படையினரை குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் அவர்கள் செயற்படுகின்றார்கள்.
அண்மையில் ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது குற்றவாளிகள் காணப்படும் நாடாக இது காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் பாதாள உலக குழுக்களையும் ஏனைய குழுக்களையும் அவர் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் இறுதி யுத்ததின்போது அழிவுகளை ஏற்படுத்திய படையினர் குறித்தோ அதிகாரிகள் குறித்தோ அங்கு பேசவில்லை.
சிங்கள தலைவர்களைப்பொறுத்த வரையில் வலதுசாரி கட்சிகள் என்றாலும் இடதுசாரி கட்சிகள் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவராகயிருந்தாலும் தமது படையினரை எவ்வாறாவது பாதுகாக்கவேண்டும் என்று செயற்படுகின்றனர்- என்றார்.