இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானியின் அதானி குழுமம் புதிய விமான சேவை நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து உள்மட்டத்தில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், தற்போது இந்திய விமானப் போக்குவரத்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாவுக்கு புதிய போட்டி உருவாகும் எனத் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மும்பை உள்ளிட்ட இந்தியாவின் எட்டு விமான நிலையங்களை நிர்வகித்து வரும் அதானி குழுமம், சுமார் 11 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு முன்னர் விமான சேவைத் துறையில் நேரடியாக நுழையப் போவதில்லை என தெரிவித்திருந்த நிலையில், புதிய தகவல்கள் கவனம் ஈர்த்துள்ளன.
எனினும், விமான சேவைத் தொழில் அதிக முதலீடு மற்றும் ஆபத்து நிறைந்த துறையாகக் கருதப்படுவதால், இதுகுறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், ஆரம்பகட்ட ஆலோசனைகள் மட்டுமே இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஏர் இந்தியா தொடர்பான சிக்கல்கள் மற்றும் இந்திய விமான சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, புதிய விமான நிறுவனங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இந்திய அரசு சில முன்னணி வணிகக் குழுக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 89 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர சொத்து மதிப்பைக் கொண்ட கௌதம் அதானி, ஆசியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் விமானத் துறையில் களமிறங்கினால், அது அவரது வணிகப் பேரரசின் மிக முக்கிய விரிவாக்கங்களில் ஒன்றாக அமையும் என பொருளாதார ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
எனினும், அதானி குழுமம் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பொன்றையும் வெளியிடவில்லை.








