முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தால் பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஐந்தாம் மாதம் 30 ஆம் திகதி களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட ஜீவன் தொண்டமானுக்கு எதிராக பெருந்தோட்ட நிறுவனத்தினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது இன்று (03) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், சந்தேகநபர்களாக ஜீவன் தொண்டமான் உட்பட 10 சந்தேக நபர்களின் பெயர்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களை தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சான் குலத்துங்க ஆகியோர் இந்த வழக்கில் முன்னிலையாகியிருந்தனர்.
களனிவெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு சார்பாக சட்டத்தரணிகளான பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.
மேலும், இந்த வழக்கானது எதிர்வரும் ஆறாம் மாதம் ஒன்பதாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.