தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், சென்னை 11வது சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
‘மன்னன் வகையறா’ திரைப்படத்தின் தயாரிப்பிற்காக நிதியுதவி பெற்ற நடிகர் விமல், ரூ.4.5 கோடி தொகையை திருப்பிச் செலுத்தாததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வழங்கப்பட்ட காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அது திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நிதியளித்த கோபி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியதையடுத்து, விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விமல் தரப்பு முடிவு செய்துள்ளது. அதேவேளை, கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து, தண்டனை அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.







