மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் சிறு போக பயிர்ச் செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுத்தன் தலைமையில், கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் நேற்று (06) இடம் பெற்றது.
இதன் போது அதிகாரிகளினால் திட்ட முகாமைத்துவ குழுக் கூட்டத் தீர்மானங்கள் கலந்துரையாடப்பட்டு அங்கிகரிக்கப்பட்டன.
இப் பிரதேசத்தில் சிறு போக நெற்செய்கை மேற்கொள்வதற்கான நேர அட்டவணை, மானிய உரம் வழங்கள், காப்புறுதி, அறுவடை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர், விவசாயிகளின் பாவனையில் உள்ள வங்கி கணக்கு இலக்கங்களை வழங்குவதனால் துரிதமாக மானிய கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.
அதேசமயம் விதைப்பு ஆரம்ப திகதியாக எதிர்வரும் 30. 03.2025, விதைப்பு முடிவுத் திகதி 10.04.2025, அறுவடை ஆரம்பமாகும் திகதியாக 25.07. 2025 முதல், முடிவுத் திகதி 30.07.2025 என தீர்மானிக்கப்பட்டதுடன், 3 1/2 மாதம் கொண்ட நெல்லினம் விதைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன், கமநல சேவைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளர் கே. பிரதீபன், நீர்பாசன பொறியியலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்பினர், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.










