மிக மோசமான நிலையிலிருந்த மட்டக்களப்பின் பிரதான பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர், பஸ் நிலையத்தின் நிலைமையினை அறிந்து, அங்கு பாரிய சிரமதான நடவடிக்கையொன்றை உடனடியாக முன்னெடுத்தார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் தொடர்ச்சியான வேலைத்திட்டங்களும் கண்காணிப்புகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான பஸ் நிலையத்திற்கு கள விஜயம் கொண்ட ஆணையாளர் அங்கு கைவிடப்பட்ட பகுதிகள் மிக மோசமான நிலையில் உள்ளதை கவனத்தில் கொள்ளப்பட்டு உடனடியாக குறித்த பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட்டது.
மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பங்கேற்புடன் பாரிய சிரமதான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தின் ஊடாக இலங்கையின் பல பாகங்களுக்கும் போக்குவரத்துகள் நடைபெற்றுவரும் நிலையில் அதிகளவான பயணிகள் தரித்துச் செல்லும் இடமாகவும் காணப்படுகின்றது.
இதனை தொடர்ச்சியான செயற்பாடுகள் மூலம் அழகுபடுத்தும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.










