ஹபரணை, அலுத்ஓய பகுதியில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி இரவு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் சுமார் 8 அடி ஆழம் வரை அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில், உயிரிழந்த முன்னாள் புத்தசாசன மற்றும் காணி அமைச்சரின் 50 வயதுடைய மகனும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மற்றைய நால்வர் 25, 26, 31 மற்றும் 44 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் கந்தளாய், அலுத்ஓய மற்றும் இப்படுகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியில் யகா வங்குவ அருகிலுள்ள காணி ஒன்றிலேயே இந்த அனுமதியற்ற அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து மண்வெட்டிகள், இரும்புக் கம்பிகள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்ட அகழ்வுப் பணிக்குப் பயன்படுத்தப்பட்ட பல பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








