இலங்கையில் கால்வாய் ஒன்றின் மீது அமைக்கப்படவுள்ள முதலாவது ‘Canal-Top Solar’ சூரிய மின்சக்தி திட்டத்திற்கான முதற்கட்ட சாத்தியக்கூறு ஆய்வு மஹியங்கனையின் வியானா கால்வாய் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுடைய இந்தக் கால்வாய், தேசிய மின்கட்டமைப்புக்கு அதிகளவிலான புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வழங்கும் திறனும், ஆண்டின் பெரும்பகுதியில் போதுமான சூரிய ஒளி கிடைப்பதும் கருத்தில் கொண்டு திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்வாயின் மீது சூரிய மின்தகடுகள் பொருத்தப்படுவதன் மூலம் நீர் ஆவியாவதைக் குறைத்தல், நீரின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் பேணுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட எதிர்கால ஆற்றல் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
மேலும், திட்டத்தின் கீழ் பாதுகாப்பு மின்சார யானை வேலியும் அமைக்கப்படவுள்ளதால், வனப்பகுதிகளில் இருந்து வரும் யானைகள் கால்வாயில் விழுந்து உயிரிழக்கும் அபாயத்தையும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தேசிய அளவிலான முன்னோடி அபிவிருத்தித் திட்டமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான கள விஜயமும் மறுஆய்வுக் கலந்துரையாடலும் நேற்று முன்தினம் (20) மஹியங்கனையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அலககோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.








