நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த 21 கைதிகளின் குடும்பங்களுக்கு உடனடியாக நியாயமான நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நீதி அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தின் போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உயிர்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமெனவும் அக்குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைக்குள் நிகழும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தற்போதைய ஜனாதிபதியும் முன்னர் வலியுறுத்தியிருந்ததாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் 27 கைதிகளும், 2020ஆம் ஆண்டு மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளும் உயிரிழந்த சம்பவங்கள் நினைவுகூரப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறக் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இலங்கை கையொப்பமிட்டுள்ள ‘நெல்சன் மண்டேலா’ சர்வதேச சிறைச்சாலை விதிமுறைகளின் அடிப்படையிலும், இத்தகைய உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டிய கடமை இருப்பதாக அக்குழு வலியுறுத்தியுள்ளது.
“கைதிகளும் மனிதர்களே” என்ற கொள்கைக்கு அமைவாக, உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நீதியும் நட்டஈடும் வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு கோரியுள்ளது.








