கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள கடற்பரப்பில், வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 காலியான கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதந்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட அட்சரேகை 06°54′ மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079°32′ அருகிலுள்ள கடற்பரப்பில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய கடல் நீரோட்டத்தின் காரணமாக, இந்த கொள்கலன்கள் பேருவலை, நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடலோரப் பகுதிகளை நோக்கி மிதந்து செல்லக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் பலநாள் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடலில் மிதந்து வரும் இந்த கொள்கலன்கள் எங்காவது தென்பட்டால், அது தொடர்பான தகவல்களை உடனடியாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் வானொலி செய்தி மையத்திற்கோ அல்லது அருகிலுள்ள மீன்பிடித் துறைமுக அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.








