மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் வெடி பொருட்களுடன் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் விமானப்படை கோப்ரல் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (17) அதிகாலை 2.00 மணியளவில் பாலையடிவட்டை பகுதியில் ரோந்துசென்ற பொலிஸார் அப்பகுதியில் வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது அதில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்திலிருந்து வெடிபொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட வாகனம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான வாகனம் எனவும், குறித்த நபர்கள் புதையல் எடுக்கும் நோக்குடன் அப்பகுதிக்கு வந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருட்கள், கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் கைதுசெய்யப்பட்ட நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.