வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய 28 வயதுடைய பொலிஸ் காவலர் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பேராதனை – முருதலாவ பகுதியைச் சேர்ந்த குறித்த காவலர், சம்பவ தினத்தில் பிரதான வாயில் பாதுகாப்பு கடமையில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரியுடன் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுவிட்டு மீண்டும் கடமைக்கு திரும்பிய அவர், அதிகாலை 4.05 மணியளவில் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த நிலையில் உடனடியாக பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான்கரை வருட சேவை அனுபவம் கொண்ட குறித்த காவலர், சமூக ஊடகத்தின் ஊடாக அறிமுகமான இளம் பெண் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனஸ்தாபமே இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.








