இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் யானை – மனித மோதலுக்கு நிலையான தீர்வொன்றை உருவாக்கும் நோக்கில், மூங்கில் உயிரியல் வேலி (Bio-fences) அமைக்கும் திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், சீனாவின் பெய்ஜிங்கில் அமைந்துள்ள சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு மையத்திற்கு (ICBR) மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, மூங்கில் பயிர்ச்செய்கை, நவீன பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை உற்பத்திகள் தொடர்பில் இலங்கை குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.
யானைகள் மனித குடியிருப்புகளுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில், மூங்கில் உயிரியல் வேலிகளை உருவாக்குவதற்கான சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை கோரியிருந்தது.
இதற்கு பதிலளித்த சீனத் தரப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, நவீன தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்க உறுதியளித்துள்ளது.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், யானை – மனித மோதலை குறைப்பதுடன், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








