சிங்களவர்களுக் கெதிராக ரணில் விக்கிரமசிங்க நடாத்திய பட்டலந்த சித்திரவதை முகாம் பற்றிய செய்திகளை இப்போதுதான் சிங்களவர்களும் தமிழர்களும் படித்துக்கொண்டிருக்கின்றனர்.
அவர் நடாத்திய 48 வதை முகாம்களில் பட்டலந்த முக்கியமானதென்பதால் அதை விசாரணை செய்ய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
ஆனால் அந்த காலப் பகுதியில் வடகிழக்கில் சிங்கள இராணுவம் முகாம் அமைத்த ஒவ்வொரு இடங்களும் சித்திரவதை கூடங்களாகவே இருந்தன.
இந்த வதை கூடங்களுக்கான விசாரணைகளை நடாத்தி, பாதிக்கப்பட்ட தமிழருக்கு நீதி வழங்குவது யார்?
இங்கே வீரமுனை என்றொரு கிராமம், அம்பாறையில் முழு மூச்சாக சிங்கள இராணுவத்தாலும், சம்மாந்துறை முஸ்லீம் ஊர்காவல் படையினராலும் அழித்தொழிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது.படியுங்கள்….;
இவை யாவற்றுக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் ரணசிங்க பிரேமதாசவும்தான் காரணம் என்பதை உங்கள் பரம்பரைக்கும் சொல்லி வையுங்கள். 1990 ம் ஆண்டு ஆனி மாதமும், ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ, காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனை வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.

கொண்ட வெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் ஊர்க்காவல் படையினரும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதை அறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர்.
ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக 54 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும் பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள்.

தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. சம்மாந்துறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. 54 பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள்.
இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் ஊர்காவற் படையினர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கள் உறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கிய போதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை.

சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவிற்குத் தப்பியோடினார்கள். வீரமுனை மக்கள். காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள்.
அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பறவாயில்லை. அகதி முகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக் கூடமாக்கப்பட்டது.
ஆட்டுப்பண்ணைகளில் இறைச்சிக்குத் தெரிவாகிய கிடாக்களைப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள்.
ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிரு நாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது.

“உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”. பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர்.
எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.
1990ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப்பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள்.
26ம் திகதி கொண்ட வெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை வீரமுனை, கலைதிபுரம் புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள்.
இன்றுவரை அவர்களின் கதையில்லை. மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது.
ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இணைந்து வந்த சிங்கள ஊர்காவட்படையினரும் முஸ்லிம் ஊர்காவட் படையினரும் ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள்.
வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள்.
11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர்.
சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லிம் ஊர்க்காவல் படையினரும் துணைக்கு வந்தனர்.
வீடுகள் தீயி இடப்பட்டன. சொத்துக்கள் சுறையாடப்பட்டன. எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர். இருபத்தைந்து பேர் கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர்.
காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றி வளைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர்.
நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதையை இன்று எத்தனை பேர் அறிவார்கள்?