வாகரையில் பொலிசாரிடமிருந்து தப்பியோடிய நபர் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அங்கு பொலிஸாருக்கு எதிராக பொதுமக்கள் ஒன்றுதிரண்ட காரணத்தினால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் உள்ள வயல் பகுதியில் உள்ள நீர் தேங்கி நிற்கும் சிறிய குளத்திற்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (19) கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றைய தினம் (18) இரவு 8.30மணியளவில் அம்மந்தனாவெளி பகுதியில் இருவர் குடிக்கச்சென்று வரும் போது, பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்யமுற்பட்டவேளை அதில் பாக்கியராசா காமலேஸ்வரன் (வயது -44) என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் தப்பியோடிய நிலையில் குழிக்குள் வீழ்ந்து இறந்திருக்கலாம் என பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், குறித்த இளைஞன் பிடிக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் பொலிஸாரினாலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தினை நடாத்த முற்பட்ட நிலையில், அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த நீதிபதி மரண விசாரணையினை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்துள்ளார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்


