காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஆரையம்பதி பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று (20) குறித்த இடத்தைச்சுற்றி வளைத்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் சட்டவிரோத மதுபானங்களை கைப்பற்றியுள்ளதுடன், உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன் போது 570 லீற்றர் கோடா அடங்கிய நான்கு வரல்களுடனும் 30 லீற்றர் வடி சாராயத்துடனும் அதனை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆரையம்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் வடி சாராயம் காச்சிக்கொண்டு இருக்கும் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பெற்ற பொருட்களையும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.