புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்று, இலஞ்ச ஊழல் வழக்கில் நேற்று (08) பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கூறியுள்ளார்.
நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தசநாயக்க, முந்தைய அரசாங்கத்தின் ஆளும் கட்சியில் இருந்தபோது இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசாங்கப் பக்கத்தில் இருந்தபோது இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த்தாக அவர் கூறியுள்ளார்.
புதிய சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட முதல் நபர் தாமே என்றும், தம் மீது தனித்தனியாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த சில நாட்களில் தமது வழக்குகள் கையாளப்பட்டதைப் போலவே நிலுவையில் உள்ள 4000 வழக்குகளையும், கையாளுமாறு அதிகாரிகளுக்கு தாம் அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.
முன்னதாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகம் தாக்கல் செய்த இலஞ்ச வழக்கு தொடர்பாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயகவுக்கு நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இருப்பினும், குற்றப் புலனாய்வுத் துறை பதுளையில் தாக்கல் செய்த தனி வழக்கின் அடிப்படையில் அவர் ஏப்ரல் 21 வரை விளக்கமறியல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.