மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் இன்று (05) மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்துதெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6000க்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல்பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்
மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை இடம் பெற உள்ளதுடன், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை அமைக்கப்பட்டுள்ளது
நாளை காலை ஏழு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும். அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன இதற்காக மாவட்டத்தில் 144 நிலையங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது.