அருகம்பை விரிகுடா சுற்றுலா மண்டலம் அடுத்த வாரத்திற்குள் திறக்கப்படவுள்ள நிலையில் அருகம்பை விரிகுடா கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் இன்று (9) ஆரம்பிக்கப்பட்டது.
ஆசியாவின் நான்காவது பெரிய கடல் பாறை அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் அருகம்பை பகுதியில் அமைந்துள்ளது.
நீர் சறுக்கல் முதலான விளையாட்டுக்களுக்கு ஏற்ற சூழலாக உள்ள காரணத்தினால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறுகம்பை விரிகுடா சுற்றுலாப் பகுதியை அதிகமாக விரும்புகிறார்கள்.

இலங்கை இராணுவத்தின் 24வது பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமிந்த கலப்பத்தியின் வழிநடத்தலில் இராணுவ வீரர்கள் அருகம்பை விரிகுடாவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்புரவுப் பணியில் சுமார் 200 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதேவேளை அறுகம்பை சுற்றுலா காவல்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொத்துவில் பிரதேச சபை அதிகாரிகளும் இந்த துப்புரவுப் பணிகளில் இணைந்து செயற்பட்டனர்.
அத்துடன், அறுகம்பை கடற்கரைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டமை கவனிக்கத்தக்கது.

24ஆவது படைப்பிரிவின் துணைத் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக, 242வது படைப்பிரிவின் தளபதி கேணல் துஷார கேலே கோரலே, 14வது லயன்ஸ் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சுரேஷ் பெரேரா மற்றும் 24வது படைப்பிரிவின் சிவில் தொடர்பு அதிகாரி கேணல் சிசிர குமார ஆகியோரும் இந்த செயற்றிட்டப் பணிகளில் பங்கேற்றனர்.
