யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன் காரணமாக பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு முன்பாக இன்று (19) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள படைவீரர் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்க திட்டமிட்டிருக்கவில்லை
எனினும் பல்வேறு தரப்பினராலும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளில் சிறிலங்காவின் போர் வெற்றியின் 16 வது ஆண்டு நிறைவு குறித்து எந்த பதிவையும் வெளியிடவில்லை என்பதும் தென்னிலங்கையில் பெரும் பேசு பொருளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக முப்படைகளையும் வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.