பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீன மயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக அதிசொகுசு, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய மெட்ரோ பஸ் வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசு, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான நிர்வாகக் கம்பனியை நிறுவி உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.