ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பன்றி வளர்ப்புத் தொழிலை மீட்டெடுக்கும் நோக்கில், ஆகஸ்ட் மாதத்தை ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி பணிக்குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, வேளாண் மற்றும் நிலக் காப்பீட்டு வாரியம், கால்நடை வளர்ப்போருக்காக விசேட காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட வணிகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் இனப்பெருக்கப் பன்றிகளுக்கு இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும்.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல், திடீர் விபத்துகள் மற்றும் பிற பன்றி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டைப் பெறும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதங்கள் முதல் நான்கரை ஆண்டுகள் வரையிலான இனப்பெருக்கப் பன்றிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை வேளாண் மற்றும் நிலக் காப்பீட்டு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்கள், கால்நடை மருத்துவ அலுவலகங்கள், கால்நடை மேம்பாட்டு அலுவலர்கள் அல்லது 1918 உதவி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.








