நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பு – தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதுடைய விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கட்டானா பொலிஸாரும், நீர்கொழும்பு மாநகரசபை தீயணைப்புப் பிரிவினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்தனர்.
உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டானா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.







