மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக நேற்று (3) மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் கிளை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
செங்கலடி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களை கைப்பற்றியுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 5 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.
ஏற்கனவே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர்களாக முரளி மற்றும் நிலாந்தனை கட்சி தெரிவு செய்துள்ள நிலையில், இருவரில் யாருக்கு ஏனைய கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதோ அவரை தவிசாளராக தெரிவு செய்வதற்கு கட்சியின் உயர்மட்ட குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அதற்கமைய கடந்த 31ஆம் திகதி தனக்கான பெரும்பான்மை ஆதரவை முரளியால் காட்ட முடியாமல்போன நிலையில், நிலாந்தன் தனக்கான பெரும்பான்மை ஆதரவை கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்டியிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளை கூட்டத்தில் முரளிக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
அதன் படி முரளி எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் தனக்கான பெரும்பான்மை ஆதரவை எழுத்து மூலம் கட்சியின் உயர்மட்ட குழுவுக்கு காட்ட வேண்டும் என்றும் அவ்வாறு காட்ட தவறினால் தனக்கான பெரும்பான்மை ஆதரவை காட்டி நிலாந்தன் கட்சி தவிசாளராக முன் நிறுத்தும் நிலையேற்படலாம் என கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் முரளியிடம் வினவிய போது, தன்னிடம் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லையென்றும் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தவிர வேறு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தனக்கு அறிவிக்கப்பட வில்லையெனவும் தெரிவித்தார்.
இது குறித்து தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் கேட்போது இவ்வாறு கூட்டம் இடம்பெற்றதாகவும் ஆதரவாளர்கள் குறித்து எழுத்து மூலம் அறிவிக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.