தாய்க் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற கட்சி, விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா. இரட்ணலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியா உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சி ஒன்று தமிழர்களுடைய நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏனையோரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

முதலில் நாம் தமிழரசு கட்சியுடன் தான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தோம். எனினும் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் முன் வரவில்லை.
அவர்களுக்கு இருக்கும் உள்ளகப் பிரச்சினையா அல்லது அந்த உறுப்பினர்களின் மனநிலையா என்பது எனக்கு தெரியவில்லை.
ஆனால், ஒரு பெரிய தாய் கட்சி என்று சொல்லிக் கொள்கின்ற ஒரு கட்சி ஒரு சில இடங்களிலும் ஏனையோருக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை” எனக் கூறியுள்ளார்.