யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன் தெரிவித்தார்.
உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (05) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துகள்களை முன்வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாணவர்களிடையே உயிர்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது.
உயிர்கொல்லி போதை மாத்திரையை வடக்குக்கு கொண்டு வரும் மொத்த விற்பனை செய்யும் நிறுவனத்திடமிருந்து அந்த மாத்திரைகள் விநியோகிக்கும் சங்கிலியை கண்காணித்து சோதனை செய்தாலே இதனை இலகுவாக கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.








