கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் தகவலின்படி, இன்று அதிகாலை மூன்று சீனப் பிரஜைகள் மீன்பிடிப்பதற்காக கெப் வாகனம் ஒன்றில் துறைமுக நகருக்கு சென்றிருந்தனர். அப்போது இரண்டு வாகனங்களில் வந்த மற்றொரு சீனப் பிரஜைகள் குழு அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின் போது, ஒருவரை கடத்திச் சென்றதுடன், அவர்கள் பயன்படுத்திய வேன் சம்பவ இடத்திலேயே கைவிடப்பட்டிருந்தது. அந்த வேனில் இருந்து வாயு துப்பாக்கி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதற்கிடையில், கரந்தனை – கேட்டுக்கடை பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி தொடர்பான சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த எஹலியகொடை பொலிஸார், காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான கல் குவியலை கண்டுபிடித்தனர்.
அதை சோதனை செய்தபோது மனிதக் கையின் ஒரு பகுதி தென்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதலில், கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் மீட்கப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணைகளில் அந்த சடலம் சீனப் பிரஜை ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டதுடன், பின்னர் அது துறைமுக நகரில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் அதே நபருடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சடலம் மேலதிக நீதிமருத்துவ பரிசோதனைக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் மோட்டார் வாகனம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தை எடுத்துச் செல்ல சந்தேகநபர்கள் அதனை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு சீனப் பிரஜைகள், நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளருமான எப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக கரையோரப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்ய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சீனப் பிரஜைகளுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சம்பவம் தொடர்பாக சீனத் தூதரகம் கவலை வெளியிட்டுள்ளதுடன், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான மற்றும் உடனடி விசாரணை நடத்தவும், இலங்கையில் உள்ள சீனக் குடிமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் சட்டபூர்வ உரிமைகளையும் உறுதி செய்யவும் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.








