புனித ஹஜ்பெருநாள் தினமான நேற்று (07) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசங்களில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 55 பேர் கைது மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,மேலும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்எம்ஐ.ரத்னாயகா தெரிவித்தார்.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறித்து பிரதேச வாசிகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை காத்தான்குடி கடற்கரை மற்றும் ஆற்றங்கரை பிரதேசங்களுக்கு பெருநாள் தொழுகைக்காக வருகை தந்த அதிகமான இளைஞர்கள் தலைக்கவசம் அணியாது வருகை தந்திருந்தனர்.
ஏற்கனவே பொலிசார் தலைக்கவசம் அணியாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்கின்ற அறிவித்தலை விடுத்திருந்த போதிலும் அவற்றை உதாசீனம் செய்து தலைக்கவசம் அணியாது பயணித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.
தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய 21 வயதுடைய வாலிபர் நேற்று முன்தினம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியில் விபத்துக்குள்ளாகி மரணமானது குறிப்பிடத்தக்கது.