முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாத தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இவ்வாரம் அறிவிக்காவிடின் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் காரியாலயத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
கல்வி அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த காலங்களில் இலவச கல்வியை பாதுகாக்க வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு அரச ஆசிரியர் நியமனங்களை வழங்க கூடாது என்று எம்முடன் இணைந்து வீதிக்கு இறங்கி போராடினார்.
ஆனால் இன்று அவர் கல்வி அமைச்சராக பதவி வகித்துக் கொண்டு தனியார் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு அரச ஆசிரியர் நியமனத்தில் முன்னுரிமையளித்துள்ளார்.

மேல் மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் அண்மையில் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ள 75 ஆசிரியர் ஆசிரியர் நியமனங்களில் 70 நியமனங்கள் தனியார் பல்கலைக்கழக பட்டங்களாகும்.
முறையான வழிமுறைகள் ஏதும் இல்லாமல் இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் வகையில் அரச ஆசிரியர் நியமனங்களை வழங்கும் செயற்பாட்டை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்.
இலவச கல்வியை பாதுகாப்பதாக தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் குறிப்பிட்டு விட்டு தற்போது அதற்கு மாற்றீடாக செயற்படுகிறது.
தனியார் பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு வழங்கும் ஆசிரியர் நியமனம் தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இல்லையேல் எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைளில் ஈடுபடுவோம் என்றார்.