அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்த குழுவினர், பிழையான தராசுகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவு இடம்பெற்ற போது, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, குறித்த நபர்கள் பயன்படுத்திய தராசில் முறைகேடுகள் காணப்பட்டதாகவும், விவசாயிகளுக்கு குறைவான பணம் வழங்கி அதிகளவு நெல் மூட்டைகளை பெற்றுச் சென்றதாகவும் விவசாயிகள் தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நெல் கொள்வனவு செய்த நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்து உரிய நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ளுமாறு தவிசாளர் அறிவுறுத்தியுள்ளார்.







