சாவகச்சேரி நகரில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்துவரும் ஒருவர், இன்று (09) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலுள்ள போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழு விசாரணையைத் தொடங்கியது.

இதற்கமைய, சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் மாணவர்கள் மூவரை நேற்று இரவு கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், மரத்தளபாட வேலைகளைச் செய்யும் ஒரு வர்த்தக நிலையத்தை இயக்கும் 45 வயதான நபர் மீது சந்தேகம் எழுந்தது.
பின்னர் அந்த நபரை கைது செய்தபோது, அவரது வசம் 330 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில், அவர் ‘ஐஸ்’ வகை போதைப்பொருளுக்கு அடிமையானவர் என உறுதி செய்யப்பட்டது.
மேலும் விசாரணைகளில், அவர் போதைப்பொருளை பாவிக்க, பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்து வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்விபரங்களைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.








