அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இலங்கைப் பொருட்களுக்கு 10 சதவீத புதிய இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்காலிகமாக அமுலில் இருந்த 10 சதவீத உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கு புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய உழைப்புத் தடுப்பு சட்டங்கள் போதிய அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், கனடா, பிரித்தானியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, கம்போடியா, ஆர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.
அதேவேளை, சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 10 முதல் 50 சதவீதம் வரையிலான “பரஸ்பர வரிகள்” (Reciprocal Tariffs) பின்னர் அமெரிக்க உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து, உலகளாவிய இறக்குமதி வரி தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் புதிய முயற்சியாக இந்த வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது.







