தமிழ்நாடு தர்மபுரி நகரப்பகுதி நான்கு வழி சாலை அருகில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு நேற்று (11) இரவு வந்த இளைஞர் ஒருவர் கழுத்தில் பாம்பு ஒன்றை சுத்தி கொண்டு மது வாங்க கடைக்கு வந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடிமகன்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கடை விற்பனையாளர்கள் செய்வதறியாமல் மது வாங்க வந்த இளைஞரிடம் இங்கிருந்து சென்று விடு என்று எச்சரித்தனர். உடனடியாக மது கொடுத்து அனுப்பி விட்டனர்.

மது வாங்கிக் கொண்டு சென்ற நபர் மதுவை பாம்புக்கும் ஊத்திக் கொடுத்த செயலால் பார்ப்பவர்கள் முகம் சுளிக்க வைத்தது. அந்த இளைஞர் மது போதையில் சாலையில் நடந்து பொதுமக்களிடம் மது வெறியில் நடந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். சாலையில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்புடன் இருந்த அந்த நபரை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு அந்த இளைஞர் பல கோணங்களில் பாம்பை பிடித்துக் கொண்டு பாம்புக்கு முத்தம் கொடுப்பது, பீர் கொடுப்பது உள்ளிட்ட வித்தைக்காட்டிக் கொண்டிருந்தார். உடனடியாக போக்குவரத்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்தார். இளைஞர் பாம்புடன் வந்து மது வாங்கி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.