வடக்கு மற்றும் கிழக்கில் புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாக்க உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடற்கரை அபிவிருத்தி செய்யப்பட்ட பின்னர் அங்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் நிர்மாணப் பணிகள் கடலோர வளங்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றைத் தடுப்பதற்காக சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க விசேட செயற்பாட்டுக் குழுவொன்றையும் நியமிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அறிவுறுத்தல்கள், 2026ஆம் ஆண்டுக்கான சுற்றாடல் அமைச்சின் திட்ட முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்புகள் தொடர்பாக நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மீளாய்வுக் கூட்டத்தின் போது வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனஜீவராசிகள் திணைக்களம், வனப்பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மேற்கொண்ட திட்டங்களின் முன்னேற்றம் விரிவாக ஆராயப்பட்டது.
ஒலுவில் பகுதியில் அதிகரித்து வரும் கடலரிப்பைத் தடுப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமித்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அதேவேளை, மனித–யானை மோதலைக் குறைக்கும் திட்டங்கள் மந்தமாக முன்னெடுக்கப்படுவது குறித்து அதிருப்தி வெளியிட்ட ஜனாதிபதி, தேவையான நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பணிகள் தாமதமடைவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்தார். இவ்வாண்டுக்கான நிதியை இவ்வாண்டிலேயே முழுமையாகப் பயன்படுத்தி திட்டங்களை நிறைவு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், யானை வேலிகள் அமைப்பதன் நோக்கம் வன எல்லைகளை வரையறுப்பதற்காக அல்ல, மக்களின் உயிர்களையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காகவே என்பதை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் நீர்வள பாதுகாப்பு, தூய்மையான கடற்கரைத் திட்டம், கரையோரப் பொழுதுபோக்கு பூங்காக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட பல திட்டங்களின் முன்னேற்றமும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
அத்துடன், இலங்கைக்கான தரமான கார்பன் உமிழ்வு கொள்கையை உருவாக்குவதன் மூலம் புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளும், வனவிலங்கு திணைக்கள ஓய்வு விடுதிகளை நவீனமயமாக்குதல் மற்றும் தேசிய தாவரவியல் பூங்காக்களை மேம்படுத்தும் திட்டங்களும் கலந்துரையாடலில் முக்கிய இடம் பெற்றன.








