தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்யப்பட்டதாகக் கூறப்படும், தங்க முலாம் பூசப்பட்ட கதாயுதத்துடன் கூடிய அனுமன் சிலை ஒன்றை தோண்டி எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வழிபாடு செய்த அனுமன் சிலை 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜா-எல, மெல்வத்தை பகுதிக்கு இரகசியமாக கொண்டு வரப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மோசடி கும்பல் ஒன்று பணம் பறிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
அவ்வாறு புதைக்கப்பட்டுள்ள அந்த சிலையை இந்தியாவில் உள்ள பூசகர் ஒருவருக்கு 2 கோடிக்கும் அதிகமான ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த கொடுக்கல் வாங்கல் பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் பங்களிப்புடனேயே நடப்பதாகவும் மோசடிக்காரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சிலையை தோண்டி எடுத்து இந்தியாவிற்கு அனுப்பும் வரை தேவைப்படும் பல்வேறு செலவுகளுக்கு சுமார் இரண்டு கோடி ரூபா பணம் செலவாகும் என்பதால், பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பணக்கார வர்த்தகர்களின் வாட்ஸ்அப் இலக்கங்களுக்கு தகவல்களை அனுப்பி செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸ் மா அதிபரிடமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமும் முறைப்பாடு செய்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இந்த பிரதான நபர் கொழும்பு பகுதியில் வைத்து கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேக நபரின் தொலைபேசியை பரிசோதித்த போது, மேலும் பெருமளவானோருக்கு வாட்ஸ்அப் ஊடாக இந்த மோசடி தொடர்பான காட்சிகளை அனுப்பியுள்ளமை தெரியவந்தது.
கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.








