சவுதி அரேபியாவுக்கு எதிரான கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாக, இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று (23) தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதல், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான செங்கடலில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், சர்வதேச எண்ணெய் விநியோகத்திலும் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில், ஈரான் இலக்குகள் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் 12-ஆவது இரவாக நீடித்துள்ளன.
முன்னதாக, யேமனில் ஹவுத்திகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து சவுதி அரேபியாவுக்கு எதிராக கடற்படை முற்றுகையை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை, பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கை அதிகரிக்கும் முயற்சியாக சில அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இதனையடுத்து, பாப் அல்-மண்டேப் நீரிணை வழியாக பயணித்த பல எண்ணெய் கப்பல்கள் தங்களது பாதையை மாற்றியுள்ளன. சீனா மற்றும் இந்தியாவுக்குச் சவுதி எண்ணெய் ஏற்றிச் சென்ற மூன்று கப்பல்களும் பாதுகாப்பு காரணங்களால் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹவுத்திகள் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு கப்பல்கள் என்செலியா (Encelia) மற்றும் லைலா (Layla) என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், என்செலியா கப்பல் ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாக அவசரச் செய்தி அனுப்பியதாக கடல்சார் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லைலா கப்பல் தொடர்பான தாக்குதல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவத்தால் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. மாற்று கடல் வழிகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், பயண நேரமும் போக்குவரத்து செலவும் பல மடங்கு உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஹவுத்திகளின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்குப் பிராந்திய மோதலை மேலும் தீவிரப்படுத்துவதோடு, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் மீது கூடுதல் இராணுவ அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.








