மன்னார் நகர சபை எல்லைக்குள் காணப்படும் மாடுகளை அறுக்கும் கொள்களமொன்று சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை காரணமாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
மன்னார் பள்ளிமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த கொள்களமானது பல வருடங்களாக சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நிலையில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

குறிப்பாக மாடுகளை அறுக்கும் கொள்களமானது அசுத்தமாக காணப்பட்டமை, உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமை, விலங்கு கழிவுகள் சுற்றுப்பகுதிகளில் காணப்பட்டமை, கழிவு நீர் தேங்கி காணப்பட்டமை, அரச அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாமை போன்ற பல்வேறு குறைபாடுகளின் அடிப்படையில் குறித்த கொள்களத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மன்னார் நகரசபைக்கு பல இலட்சம் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும் மக்களின் சுகாதார வசதிகளை கருத்திற் கொண்டு நகரசபையும் குறித்த சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.