அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்திலுள்ள யூனியன் கவுண்டியின் கிளாட்ஸ்டோன் வனப்பகுதியில், மின்கம்பத்தில் ஏறிய கரடி ஒன்று உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20ஆம் திகதி, சாலையோரத்தில் அமைந்திருந்த சுமார் 22 அடி உயர மின்கம்பத்தில் கரடி ஒன்று ஏறி அதன் உச்சிப்பகுதியை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவேளை, கரடியின் உடல் உயர் மின்னழுத்த மின்கம்பிகளைத் தொட்டதால் கடுமையான மின்சாரம் தாக்கியுள்ளது. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக பொலிஸார் மற்றும் அவசர மீட்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் கரடியை உயிருடன் காப்பாற்ற முயற்சித்த போதிலும், மின்சார தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால் அது மின்கம்பத்தின் மேற்பகுதியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னர் கரடியின் சடலம் மின்கம்பத்திலிருந்து கீழே இறக்கப்பட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தையடுத்து, மின்கம்பத்தின் உச்சியில் சிக்கியிருந்த கரடியின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, பலரிடையே கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.








