மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்பைப் பொறுத்தவரை, புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது.
முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையும், புத்தளத்திலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹம்பாந்தோட்டை–பொத்துவில் மற்றும் புத்தளம்–மன்னார்–காங்கேசன்துறை–முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும். அதேபோல், முல்லைத்தீவு–திருகோணமலை மற்றும் புத்தளம்–காலி–ஹம்பாந்தோட்டை கடற்பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 முதல் 2.5 மீட்டர் உயரம் வரை அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








