வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தால் திருக்கோயில் தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

தமிழர் விரோத செயல்களுக்கும் தமிழர் தேச ஆக்கிரமிப்புகளுக்கும் எதிரான, போராட்டம் தமிழர்களாக உணர்வோடும் உரிமையோடும் அணி திரள்வோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு சர்வதேச மேற்பார்வையுடன் நீதி விசாரணை வேண்டும், உகந்தை முருகன் ஆலய வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும், மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தர விவகாரம் ,வட்டமடு மேய்ச்சல்தரை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கான நீதி, யுத்தத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான நீதி, அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல், சட்டவிரோத காணி அபகரிப்புகள் போன்ற பல விடயங்களை முன்னிறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் பொதுமக்கள், சிவில் அமைப்புகள், இளைஞர்கள் என பல தரப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரின் செயலாளர் போராட்டத்தை குழப்பியதோடு போராட்டம் நடத்த தடை என தெரிவித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட செயற்பாட்டாளர்கள், தாய்மார்கள், மற்றும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் ஆகியோரோடும் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
