திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்தார்.
சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று முன்தினம் (16) தம்பலகாமம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றபோது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2025-01-01; தொடக்கம் 2025-05-31ம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நிலாவெளி பொலிஸ் பிரிவில் 04 சிறுவர்களும் ,உப்புவெளி பொலிஸ் பிரிவில் 03 சிறுவர்களும் ஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் 04 சிறுவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மூதூரில் 03 சிறுவர்களும், கிண்ணியா 04 சிறுவர்களும் புல்மோட்டை பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஷ்பிரயோகமும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஷ்பிரயோகமும் துறைமுக பொலிஸ் பிரிவில் 01 சிறுவர் துஸ்பிரயோகமும் இடம்பெற்றுள்ளது.
அத்துடன் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற சிறுவர்கள் 371 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் பிரிவில் 60 சிறார்கள், திருகோணமலை பொலிஸ் பிரிவில் 43, துறைமுக பொலிஸ் பிரிவில் 05 ,சீனக்குடா பொலிஸ் பிரிவில் 18, கிண்ணியா பொலிஸ் பிரிவில் 43, மூதூர் பொலிஸ் பிரிவில் 47 ,சம்பூர் பொலிஸ் பிரிவில் 52 ,நிலாவெளி பொலிஸ் பிரிவில் 24 குச்சவெளி பொலிஸ் பிரிவில் 23, புல்மோட்டை பொலிஸ் பிரிவில் 30 ஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் 26 சிறுவர்களும் இனம் காணப்பட்டுள்ளனர் இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
சரோஜா குழந்தை பராமரிப்பு கருத்தின் கீழ் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளை அடையாளம் காண பொது பாதுகாப்பு குழுக்களால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக குழந்தைகளிடமிருந்து தகவல்களை சேகரிப்பதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்
இவ்வாறான திட்டங்களின் ஊடாக எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை குறைக்க முடியும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.