பல்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் நேற்று முன்தினம் (18) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் காலியில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொரகீன சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பயணித்த காரின் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் காலி குருந்துகஹஹெதெக்ம பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபரும் இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய காரின் சாரியும் ஆவர்.

சந்தேக நபர் வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பல் தலைவரின் பிரதான துப்பாக்கிதாரியாக செயற்பட்டு வந்தவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி காலி எல்பிட்டிய பிரதேசத்தில் நபரொருவரை சுட்டுக் கொலை செய்தல் மற்றும் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி நபரொருவரை சுட்டுக் கொலை செய்தல் ஆகிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








