வடகிழக்கு வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட சங்கத்தின் நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவணப்பட திரையிடலும் கருத்துப்பகிர்வும் நேற்று (22) மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் அமெரிக்கமிசன் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது வடகிழக்கில் வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி அலைந்து உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூரும் வகையில் ஈகச்சுடர் ஏற்றப்பட்ட அகவணக்கம் செலுத்தப்பட்டது.




இதன்போது காணாமல்ஆக்கப்பட்டவர்களின் கண்ணீர் கதைகளை சுமந்துவந்த எழுநா அமைப்பினால் தயாரிக்கப்பட்ட நீதிக்கான நீண்டகாத்திருப்பு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் மு.முரளிதரன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான எஸ்.நிலாந்தன், பிரதேசசபை உறுப்பினர்களான வசந்தன், சுவேந்திரன்,சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆவண திரைப்படத்தினை பார்வையிட்டதன் பின்னர் கருத்துப்பகிர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.








