எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18% வற் வரியை விதித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் அதி விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. Cloud Commuting களஞ்சிய வசதிகள், கணினி சேவைகள், மென்பொருள் சேவை வழங்கள், Web-based applications, E-Commerce Services, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் போலவே விளம்பரப்படுத்தல், Social Media Marketing, Data encryption போன்ற சகல இலத்திரனியல் சேவைகள் துறைகள் மீதும் இது விதிக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் துறையில் இலட்சக்கணக்கானோர் தொழில்வாய்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இளம் தலைமுறையினர், நடுத்தர வருமானம் ஈட்டும் தலைமுறையினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடியாக இதை கருத முடியும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரமே இந்த வற் வரி விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதனை மூடி மறைத்து வருகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை மாற்றுவோம் என அரசாங்கம் முன்னர் பிரஸ்தாபித்தது என்றாலும் அதிகாரத்துக்கு வந்த பின்னர் எந்த வித மாற்றாங்களையும் இதில் மேற்கொள்ளாது இந்த வரிகளைத் தொடர்ந்தும் விதித்து வருகின்றது. டிஜிட்டல் சேவைத் துறைகளை நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தொழில்முனைவோர்கள் மீது இந்த வரிகளை விதிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.








